அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், திருமாலின் கையில் உள்ள சங்கைப் போன்ற வடிவைக் கொண்ட இராமேசுவரம் எனும் தீவில், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் எழிலோடு அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது. ஸ்ரீஇராமபிரான் இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தையே...